
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக் நினைவை போற்றும்விதமாக அவர் பிறந்த கேம்பர்லீ நகரமும் மதுரையும் கலாச்சார இணைப்புத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
18-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் மழையின்றி பல ஆறுகள் வறண்டதால் பஞ்சம் அதிகரித்தது. இதற்காக முல்லைப் பெரியாற்றில் அணை கட்டும் திட்டத்தை ஜான் பென்னி குயிக் உருவாக்கினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது சொத்துகளில் பெரும்பகுதியை விற்று அணையைக் கட்டி முடித்தார். இவரது நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் மணிமண்டபம் கட்டி தென்தமிழக மக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும், பென்னி குயிக் பிறந்த கேம்பர்லி நகரப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் 2022-ல் அவருக்கு சிலையும் அமைக்கப்பட்டது.