
சென்னை: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாக்களை மறுக்கக் கூடாது என்றும், குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், “இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, ஈழத் தமிழர் நலன்களுக்கு எதிரானது ஆகும்” என்றும் அவர் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட 2015ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும் கூட, அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஈழத் தமிழர் நலன்களுக்கு எதிரானது ஆகும்.