
நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இப்படத்தை இயக்குநர் அபினவ் காஷ்யப் இயக்கினார். இவர் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் சகோதரர் ஆவர். தபாங் படத்திற்குப் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டனர்.
இதனால் அபினவ் காஷ்யப் அடிக்கடி சல்மான் கானைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது மீண்டும் அபினவ் காய்ஷப் நடிகர் சல்மான் கானைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,”சல்மான் கான் ஒரு ரவுடி, அவர் கெட்டவர், தொழில் தர்மத்திற்கு எதிராகச் செயல்படுபவர்.
சல்மான் ஒருபோதும் இதில் நேரடியாக ஈடுபடுவதில்லை. அவருக்கு நடிப்பில் கூட ஆர்வம் இல்லை. கடந்த 25 வருடங்களாக அவர் அதில் ஈடுபடுவதில்லை. அவர் ஒரு பிரபலமாக நபராக இருக்க வேண்டும் என்பதற்காக நடிக்கிறார். அவர் ஒரு குண்டா (குண்டர்). தபாங்கிற்கு முன்பு எனக்கு இது தெரியாது.
அவர் 50 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள்.
அவர்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். நீங்கள் அவர்களுடன் உடன்படவில்லை என்றால், அவர்கள் உங்களைப் பின்தொடர்கிறார்கள். சல்மான் கானுடன் பணியாற்றும்போது எச்சரிக்கையுடன் இருக்கும் படி எனது சகோதரர் அனுராக் காஷ்யப் என்னை எச்சரித்தார்.
தேரா நாம் படத்தின் மூலம் அவருக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. ‘உன்னால் சல்மானுடன் படம் எடுக்க முடியாது’ என்று கூறினார். நான் ஏன் அவருடன் படம் எடுக்க முடியாது என்பதை அவர் எனக்கு விரிவாகச் சொல்லவில்லை.
அவர் தேரா நாம் படத்தைக் கைவிட்டுவிட்டார். எனது சகோதரர் தேரா நாம் படத்திற்கு கதை எழுதினார். ஆனால் தயாரிப்பார் போனி கபூர் அவரிடம் தவறாக நடந்து கொண்டார். எனது சகோதரனுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்தது” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டில், இயக்குநர் அபினவ் காஷ்யப் ஒரு பேஸ்புக் பதிவில் சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர்கள் அர்பாஸ் கான் மற்றும் சோஹைல் கான் மற்றும் தந்தை சலீம் கான் ஆகியோர் தனது வாழ்க்கையை நாசப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து அபினவ் காஷ்யப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக அர்பாஸ் கான் கூறினார்.
ஆனால் சல்மான் கான் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால் இது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் முதல் முறையாகப் பேசினார்.
பிக்பாஸ் போட்டியாளர் ஷெஹ்னாஸ் கில் தனது சகோதரரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தார். ஷெஹ்னாஸ் கில், நடிகர் சல்மான் கானிடம் நீங்கள் பலரது முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்து இருக்கிறீர்கள் என்று கூறினார்.

உடனே சல்மான் கான், ”நான் யாருடைய வாழ்க்கையையும் கட்டியெழுப்பவில்லை. சர்வ வல்லமையுள்ள கடவுள் தான் வாழ்க்கையை உருவாக்குகிறார், நான் அல்ல. உண்மையில், மக்கள் என்னைப் பலரது வாழ்க்கையை அழித்ததாகக் கூட குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக நான் வேண்டுமென்றே அவர்களை அழித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
அது என் கைகளில் கூட இல்லை. ஆனால் இப்போதெல்லாம், அது அப்படித்தான் நடக்கிறது. எல்லோரும், ‘அவர் உங்கள் வாய்ப்புகளைப் பிடுங்கிக்கொள்வார்’ என்று கூறுகிறார்கள். நான் யாருடைய வாழ்க்கையைத் தட்டிப் பறித்து இருக்கிறேன்?” என்று தெரிவித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…