
நடிகை பானு பிரியாவின் சகோதரியான சாந்தி பிரியா, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
தமிழ்ப் படங்களில் நடித்த அவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.
சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே பிஸியாக நடித்த சாந்தி பிரியா பிரபல மராத்திய நடிகர் சித்தார்த் ரே என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின் சினிமாவைவிட்டு விலகி இருந்தார். தற்போது, சாந்தி பிரியா ‘பேட்கேர்ள்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கிய ‘பேட்கேர்ள்’ படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் நடிகை சாந்தி பிரியா The Indian Express நாளிதழுக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். தனது கணவர் மாரடைப்பால் இறந்தது குறித்து அதில் பகிர்ந்திருக்கிறார்.
“எனது திருமண வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பினேன். நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவள், அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.
அவருக்காக சில விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அவரின் மறைவை என்னால் மறக்கவே முடியாது.
வழக்கம் போல எல்லோரும் இரவு உணவிற்காக டைனிக் டேபிளில் அமர்ந்திருந்தோம்.

என் இளைய மகனிடம் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு விக்கல் வந்தது. மயங்கி விழுந்தார். பிறகுதான் அது மாரடைப்பு என்று தெரியவந்தது.
ஒருவருக்கு மாரடைப்பு வருவதை நான் முதன்முறையாகப் பார்த்தேன். எனது வீட்டிற்கு மேலே ஒரு மருத்துவர் தங்கியிருந்தார். அவரை அழைத்து வந்தோம்.
அவரும் என்னென்னவோ செய்து பார்த்தார், ஆனால் எனது கணவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
அப்போது என் உணர்வுகளை வெளிப்படுத்துவதா அல்லது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதா என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் அந்தத் தருணத்தில் நான் யாரிடமும் உதவி கேட்க விரும்பவில்லை” என்று பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…