
தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது பற்றி இன்று பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், 1940-களில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் படங்கள் இயக்கிய முதல் இயக்குநர், ஒய்.வி.ராவ் என்றழைக்கப்படும் எறகுடிப்பட்டி வரத ராவ். அவர் காலத்தில் இது பெரிய சாதனை. அவர் தமிழில் இயக்கிய படங்களில் ஒன்று, ‘சாவித்திரி’. மகாபாரதத்தில் வரும் ‘சத்யவான் சாவித்திரி’ கதைதான்.
துயுமத்சேனன் என்னும் சால்வ நாட்டு மன்னன் போரில் தோல்வியடைந்து, தன் மனைவி, மகன் சத்யவானோடு காட்டில் வாழ்ந்து வருகிறார். அந்தக் காட்டுக்குத் தன் தந்தை அஸ்வபதியோடு வரும் சாவித்திரி, சத்தியவானின் அழகில் மயங்கி காதல் கொள்கிறாள். அவனைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தந்தையிடம் சொல்கிறாள். அப்போது அங்கு வரும் நாரதர், ‘சத்தியவானின் ஆயுள் இன்னும் 12 மாதங்களே’ என்று எச்சரிக்கிறார். ஆனால், சாவித்திரி, ‘சத்தியவானை கணவனாக நினைத்துவிட்டதால், மணந்தால் அவரையே மணப்பேன்’ என்கிறார், தந்தையிடம்.