
டிடிவி.தினகரன், அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாக கருத்து சொல்ல நான் தகுதியானவள் அல்ல என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மூழ்கும் கப்பலில் உட்கார்ந்து கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியை மூழ்கும் கப்பல் என்கிறார். 2026 தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை தொடர்வாரா என்பதே அவருக்குத் தெரியாது. செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்யும் அளவுக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனமானது அல்ல. அவர் மீது எத்தனை வழக்குகள், குற்றச்சாட்டுகள் உள்ளது என்பது அவருக்கே தெரியும். முதலில் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ளட்டும். பிறகு அவர் எங்களைப் பற்றி விமர்சிக்கட்டும். நயினார் நாகேந்திரனின் மகன் 2014-ல் இருந்தே பாஜகவில் இருக்கிறார். குறிப்பாக, நயினார் நாகேந்திரனுக்கு முன்பாகவே அவரது மகன் பாஜகவல் இணைந்தவர்.