
தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 5 செ.மீ.வும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் மற்றும் நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ.வும் மழை பதிவாகியுள்ளது.
தென் மாவட்டப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் 12-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப். 7) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுதினம், கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

10-ம் தேதி பல மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
வரும் 10-ம் தேதி சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.