
தூத்துக்குடி: கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் உலகில் சிறந்த 10 நாடுகளுக்குள் இந்தியா இடம் பிடிக்கும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மொத்தம் ரூ.303 கோடியில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை தொடக்க விழா மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தலைமை வகித்தார். தமிழக அமைச்சர் பி.கீதாஜீவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். விழாவில், மத்திய துறைமுகங்கள் துறைச் செயலர் டி.கே.ராமச்சந்திரன், சிறப்புச் செயலர் ராஜேஷ் குமார் சின்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.