
போடி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று தேனி மாவட்டம் கம்பம், போடி, தேனி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கம்பம் பிரச்சாரத்துக்காகச் சென்றபோது அனுமந்தன்பட்டி பகுதியில் பெண்கள் சிலர் வழிமறித்தனர். அப்போது அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்று முழக்கமிட்டனர். பாதுகாவலர்கள் இவர்களை விலக்கியதைத் தொடர்ந்து பிரச்சார வாகனம் தொடர்ந்து சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் போடி பிரச்சாரத்தில் அதிமுகவினர் பிளக்ஸ் பேனர் ஏந்தி முழக்கமிட்டனர். பேனரில் ‘நீங்க மட்டும் போதும் தலைவா; நாங்க இருக்கோம். நரிகளுக்கு என்ன வந்தது கேடு. உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு’ என்று செங்கோட்டையனைச் சாடிய வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.