
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன.
அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, “பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது.
பல பிறவி குறைபாடுகள் உட்பட குடல் பிரச்னைகளும் இருந்தன. அதற்காக கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் செப்டிசீமியா நோய் வந்து உயிரிழப்பு ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், `இந்தூரின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அரசு சுகாதார அமைப்பின் மோசமான நிலையை வெளிக்காட்டுகிறது’ என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தனர்.
அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரண்டு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்து, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “இந்தூரில் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் இரு புதிதாகப் பிறந்த குழந்தைகள் எலிகள் கடித்து இறந்தது – இது விபத்து அல்ல, இது நேரடியான கொலை.
இந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் உணர்வற்றது, இதைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது.
ஒரு தாயின் மடியில் இருந்து அவளது குழந்தை பிரிக்கப்பட்டிருக்கிறது. அரசு தனது மிக அடிப்படையான பொறுப்பையே நிறைவேற்றவில்லை.
சுகாதாரத் துறையை வேண்டுமென்றே தனியார் கைகளில் ஒப்படைத்துவிட்டனர் – அங்கு இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, ஏழைகளுக்கான அரசு மருத்துவமனைகள் உயிர் கொடுக்கும் இடங்கள் அல்ல, மரணத்தின் கூடாரங்களாக மாறிவிட்டன.
நிர்வாகம் எப்போதும் போல் “விசாரணை நடக்கும்” எனச் சொல்கிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பைக் கூட நீங்கள் உறுதி செய்ய முடியவில்லை என்றால், அரசு நடத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது?
பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் வெட்கத்தால் தலை குனிய வேண்டும்.
உங்கள் அரசு நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகளிடம் இருந்து சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது – இப்போது தாயின் மடியில் இருந்து குழந்தைகளையும் பறிக்கத் தொடங்கிவிட்டது.
மோடி அவர்களே, இந்த குரல் இன்று அரசின் அலட்சியத்திற்கு பலியாகி வரும் லட்சக்கணக்கான தாய் தந்தையர்களின் சார்பாக எழுந்து வருகிறது. என்ன பதில் சொல்வீர்கள்?
நாங்கள் மௌனமாக இருக்க மாட்டோம். இந்த போராட்டம் ஒவ்வொரு ஏழையின், ஒவ்வொரு குடும்பத்தின், ஒவ்வொரு குழந்தையின் உரிமைக்கானது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.