• September 5, 2025
  • NewsEditor
  • 0

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா… ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்திக்க தோன்றுமே. ஆம்,2008 -ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2009 -ல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட‌ சங்ககிரி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சங்ககிரி புதிய‌ பேருந்து நிலையம் பற்றித்தான் இந்த கட்டுரை உங்களுடன் உரையாட போகிறது.

சுமார் 15 ஆண்டுகளாக புதியதாகவே மக்கள் பயன்பாடு இல்லாமல் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளது.

ஏன் இந்த நிலை? அடிப்படை வசதிகள் இல்லையா? அல்லது அதிகாரிகளின் பொறுப்பின்மையா? நேரில் கள ஆய்வு செய்தபோது குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் இருபாலருக்குமான கழிவறை வசதி கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கும் கழிவறை என சுத்தமான பேருந்து நிலையம் மட்டுமல்ல… மக்கள் கூட்டம் சுத்தமாக இல்லாத பேருந்து நிலையமும்கூட… ஏன்?

சுமார் 34 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பெண்கள் காத்திருக்கும் அறை என மக்கள் பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த பேருந்து நிலையம்.

மொத்தமுள்ள 34 கடைகளில் வெறுமனே 5 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ள நிலையில், அங்கு கடைகளை டெண்டர் எடுத்துள்ள கடைக்காரர்களைக் கேட்டபோது, ஆட்சியர், நகராட்சி ஆணையர் என அனைவரும் வந்து பார்த்தும் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட தீவிரமான‌ செயல்பாடுகள் இல்லை எனவும், தங்களிடம் `கோரிக்கை நிறைவேற்றி தருகிறோம்’ என வெறும் பதில்கள் மட்டுமே அதிகாரிகள் மந்திரமாக உள்ளது என்றனர்.

இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடு இல்லாத நிலையில், “எங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் இதை மட்டுமே நம்பி இருந்தால், அது கேள்விக்குறியாகும் அவலம் உள்ளது. மாதம் ₹5000 வாடகை மற்றும் மின் கட்டணம் தனியாக என வருமானம் காட்டிலும் செலவே அதிகமாக இருக்கிறது. மேலும் மூன்று ஆண்டு குத்தகைக்கு சுமார் 1 லட்சம் முன் பணமாக செலுத்தியுள்ளோம். இந்தப் பேருந்து நிலையத்தை யாராலும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது… ஏனென்றால், மக்களின் தேவைகள் அனைத்தும் சுமார் 1 கி.மீ தொலைவிலுள்ள சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தத்திலுள்ளது. இந்தப் புதிய பேருந்து நிலையத்தின் சாலை பாதிப்பு காரணமாக இந்தப் பேருந்து நிலையததிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் புதுப்பிப்பு அளிக்கவில்லை.

மேலும் இது அன்றைய ஆளும் கட்சியான 2008-2009 தி.மு.க அரசின் ஆட்சியில் கட்டியது. ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆனபோதும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத சூழலில், இனி அது எப்படி சாத்தியமாகும்? அரசு நினைத்தால் முடியாதது இல்லை. ஆனால் அதை முழு முயற்சியுடன் செயல்படுத்த யாருமே தயாராக இல்லை என்பது நிதர்சனம்” எனக் குமுறினர்.

தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் கேட்டபோது, “சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளே சென்று வரும் அளவுக்கு நேரம் எங்களுக்கு ஒதுக்கி தரப்பட வில்லை. மேலும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது, பாதிப்படைந்த சாலை உள்ளிட்ட காரணங்கள் இருக்கின்றன” என்றனர் சுருக்கமாக.

பொது மக்களிடம் கேட்கும்போது, “பேருந்துகள் உள்ளே செல்வதில்லை. இந்த இடத்தில் எங்களுக்கான தேவைகள் பெரிய அளவில் இல்லை, எனவே இந்த பேருந்து நிலையம் இவ்வளவு செலவோடு கட்டியது எங்களுக்கு எந்த பயனையும் தரவில்லை” என்று கூறுகின்றனர்.

இது குறித்து சங்ககிரி நகராட்சி ஆணையரிடம் பேசியபோது, “சங்ககிரி நகராட்சியாக தரம் உயர்த்தி சுமார் 4 மாதங்களே ஆகின்றன. இந்தப் பிரச்னையை சரி செய்வது குறித்து சுமார் ₹50 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறோம். கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” எனக் கூறினார்.

15 ஆண்டுகளைக் கடந்து 16-வது ஆண்டை இந்தப் பேருந்து நிலையம் தொட்டிருக்கிறது. இப்போதாவது மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?!

பொறுத்திருந்து பாப்போம்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *