
2026-ல் தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியலுக்குப் புதிதாக வந்தவர்கள் கூட மாநாடு என்று மாஸ் காட்ட, எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் எழுச்சிதான் என்றாலும் கூட, அதிமுகவில் அவ்வப்போது குழப்பம் தலைதூக்குகிறதே என்று அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்டோர் திமுகவுக்கு தாவ, அது தொண்டர்களிடம் உற்சாகக் குறைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பேரணியை கையிலெடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்தார். இருப்பினும், மதுரை போன்ற சில மாவட்டங்களைத் தவிர்த்து, அதிமுகவும் பாஜகவும் தாமரை இலை நீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது கட்சியினருக்கு அதிருப்தியாகவே தொடர்கிறது என்பது கள அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.