• September 5, 2025
  • NewsEditor
  • 0

வங்காளிகளுக்கு எதிராக பாஜக:

பாஜக ஆளும் மாநிலங்களில், வங்காளி மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான கூறப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸின் “பாஷா ஆன்தோலன்” (மொழி இயக்கம்) ஆர்ப்பாட்டம் கொல்கத்தாவின் மேயோ ரோடு பகுதியில், இராணுவத்துக்கு சொந்தமான இடத்தில், இராணுவ அனுமதியுடன் தொடங்கப்பட்டது.

மம்தா பானர்ஜி

ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தர்ணா போராட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி இராணுவத்தால் கலைக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த இராணுவம், “ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு மாதத்துக்கு மட்டுமே அனுமதி கேட்டிருந்தனர். எனவே ஒரு மாதம் முடிந்ததும் ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தோம்,” என்றது.

ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, “இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு இராணுவத்தைப் பயன்படுத்துகிறது,” என விமர்சித்தது.

சிறப்பு சட்டமன்றக் கூட்டம்:

அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிஸா, டெல்லி போன்ற மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மேற்கு வங்க மக்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்தும்,

சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தத்தைக் கண்டித்தும் அதற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரவும் செப்டம்பர் 1 முதல் 4 வரை சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் இரண்டாம் நாளில், மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யக் பாசு, மேயோ ரோடில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸின் ஆர்ப்பாட்ட மேடை அகற்றப்பட்ட சம்பவத்தை 1971-ல் நடந்த பங்களாதேஷ் படுகொலையுடன் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலாக, மேற்கு வங்க சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. தலைவருமான சுவேந்து அதிகாரி, இந்திய ராணுவத்தை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் இடை நீக்கம்:

அவரை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் பிமான் வலியுறுத்தியதாலும், அவர் அமைதியாகவில்லையென்றதும், சிறப்புக் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

இந்த நிலையில், சட்டமன்றத்தின் இறுதி நாளான நேற்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச எழுந்தவுடன், பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் அவரை பேசவிடாமல் தொடர்ந்து குறுக்கிட்டனர்.

சுவேந்து அதிகாரிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், “திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் திருடர்கள்” என்று கூச்சலிட்டனர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்களை அமைதியாக இருக்குமாறு கேட்ட சபாநாயகர் பிமானின் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அவர் ஐந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்களை இடைநீக்கம் செய்து அவைகளை வெளியேற்ற உத்தரவிட்டார்.

பவுன்ஸர்களால் வெளியே அழைத்துச் செல்லப்படும்போது இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் சுயநினைவிழந்து கீழே விழுந்தனர்.

மம்தா தாக்கு:
தொடர்ந்து பா.ஜ.க-வின் கூச்சலுக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, “மோடி மிகப்பெரிய திருடன். மோடி திருடன், அமித் ஷா திருடன், பா.ஜ.க. திருடன். பா.ஜ.க. ஒரு ‘வோட் சோர்’ (வாக்கு திருடன்). இது மக்களின் ஆணையை திருடியுள்ளது,” என்றார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

“நீங்கள் வங்காளிக்கு எதிரானவர்கள். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், ‘ஜனகணமன்’ இந்தியாவின் தேசிய கீதமாக இருந்திருக்கும். வங்காள மொழி பேசுவது தேச விரோதம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்,” எனக் காட்டமாகப் பேசினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “வங்க சட்டமன்ற வரலாற்றிலேயே மிக இருண்ட நாள். அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் அல்லது பாஜக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் இருக்க வேண்டாம் என நினைத்தால், நாங்கள் தொடர்ந்து கூட்டங்களை புறக்கணிப்போம்,” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *