
மதுரை: தனது குடும்பத்தினரைப் பற்றி மட்டுமே யோசிக்கும் முதல்வருக்கு, ஏழை மக்கள் துயரைப் போக்கும் சிந்தனையே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்ட பழனிசாமி, 4-வது நாளான நேற்று சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டியில் பொதுமக்களிடையே பேசியதாவது: தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. ஒரு குடும்பம் மட்டும்தான் பயனடைகிறது.
திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. அவரது வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன பதவி கொடுக்கலாம், என்ன அதிகாரம் கொடுக்கலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகிறார். ஏழை மக்களின் கஷ்டங்களைப் போக்குவது குறித்து அவர் சிந்திப்பதில்லை.