
சென்னை: எந்த நாட்டில் இருந்தாலும் என் மனம் தமிழகத்தை சுற்றித்தான் இருக்கும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்குடன் திமுக அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதை மேலும் விரைவுபடுத்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக. 30-ல் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன்.
அன்று இரவு ஜெர்மனியில் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம், குடும்பமாக வந்து வரவேற்பு அளித்தனர். மறுநாள் நடைபயிற்சியின் போது சென்னையில் பெய்த மழை குறித்த தகவலைக் கேட்டறிந்தேன். சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்பதை துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் என் மனம் தமிழகத்தை சுற்றித்தான் இருக்கிறது.