
முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார்.
எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையேயான உரசல் மீண்டும் புகைய தொடங்கியிருக்கிறது. செங்கோட்டையன் அதிமுக-வின் சூப்பர் சீனியர். எம்.ஜி.ஆர் காலத்து ரத்தத்தின் ரத்தம். அவரின் வெடிப்பை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
யார் இந்த செங்கோட்டையன்?
1971 வரை திமுக-வில் இருந்த செங்கோட்டையன், 1972-ல் எம்.ஜி.ஆர் தலைமையில் ஆன அதிமுக-வில் இணைந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான இவர் கட்சியில் இணையும்போதே எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய மாவட்டதிற்கு உட்பட்ட தொகுதிகளில் கட்சி ரீதியிலான செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆரின் கவனத்தை ஈர்த்து நற்பெயரைப் பெற்றிருக்கிறார்.
1975-ல் கோவை மாவட்டத்தில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றிருக்கிறது. அந்தப் பொதுக்குழு கூட்டத்திற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் பொருளாளராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கம்
அந்தக் பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக முடித்ததற்காக செங்கோட்டையனுக்கு எம்.ஜி.ஆர் ஒரு பிளாங்க் செக்கை விழா மேடையிலேயே கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை செங்கோட்டையன் வாங்க மறுத்திருக்கிறார். இப்படி அதிமுக-வின் தீவிர தொண்டனாக இருந்திருக்கிறார் செங்கோட்டையன்.

அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து 1977-ல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிறார். தொடர்ந்து 1980ல் கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகிறார்.
9 முறை எம்.எல்.ஏ
1980-ல் இருந்து தற்போது வரை அதே தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். இடையில் 1996ல் மட்டும் தோல்வியை தழுவினார். மேலும் 2001 தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 9 முறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். தற்போதைய எம்.எல்.ஏவும் இவர் தான்.

மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனை போன்று அதிக தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் இருக்கிறார், தமிழக அரசியல் களத்தில். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா பொதுச்செயலாளராக பதவியேற்றப் பிறகு ஜெயலலிதாவிற்கும் ஒரு அபிமான நபராகத்தான் செங்கோட்டையன் திகழ்ந்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் பிரசார திட்டமிடலை வகுப்பவர்
எம்.ஜி.ஆர் உடன் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வது, ஜெயலலிதாவின் பிரசார திட்டமிடலை வகுப்பது என கட்சி தலைமைக்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தே பல உயரங்களை செங்கோட்டையன் எட்டினார். போக்குவரத்து (1991–1996) விவசாயம் (மே 2011–நவம்பர் 2011) தகவல் தொழில்நுட்பம் (நவம்பர் 2011–ஜனவரி 2012) வருவாய் (ஜனவரி 2012–ஜூலை 2012) பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் & விளையாட்டு (டிசம்பர் 2016–மே 2021) போன்ற துறைகளில் அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி கட்சியில் முடிவெடுக்கும் சில பொறுப்புகளைக்கூட செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா வழங்கி இருக்கிறார். இப்படி எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு நெருக்கமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கும் சீனியர். 2014-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேரிடும்பொழுது அப்போது செங்கோட்டையனின் பெயர்தான் முதல்வர் பதவிக்கு அதிகமாக அடிபட்டிருக்கிறது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை. ஓபிஎஸ் தான் முதல்வர் ஆனார்.
கட்சியில் சீனியர்…
அதன்பின் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிளவுற்றப்போது சசிகலா தலைமையில் கூவத்தூரில் ஆலோசனை நடைபெற்றபோதுகூட கட்சியில் சீனியர்… பலமுறை தேர்தலில் வெற்றிப்பெற்றவர், அரசியல் அனுபவம் கொண்டவர் அவருக்குத்தான் முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டதாக தகவல் உண்டு. ஆனால் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது எடப்பாடி பழனிசாமிக்குத்தான். கொங்கு பெல்ட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் செங்கோட்டையன் தற்போது எடப்பாடிக்கு எதிராக போர்கொடியை தூக்கியிருக்கிறார்.

என்ன பேசப்போகிறார்?
நாளை காலை 9 மணிக்கு எடப்பாடி உட்பட அதிமுக-வின் முக்கிய தலைகள் அத்தனை பேரின் கவனமும் செங்கோட்டையன் என்ன பேசப் போகிறார் என்பதிலேயே இருக்கும். அதிமுக-வின் சூப்பர் சீனியர், என்ன பேசப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்!!!