
புதுடெல்லி: மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிடுவதற்கு குக்கி-ஸோ பழங்குடியின கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக குக்கி-ஸோ கவுன்சில் பிரதிநிதிகளுக்கும், மணிப்பூர் அரசுக்கும், உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொது போக்குவரத்துக்கும், அத்தியவாசியப் பொருட்கள் மாநிலத்துக்குள் வந்து செல்வதற்கும் தோதாக தேசிய நெடுஞ்சாலை எண் 2-ஐ திறந்துவிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குக்கி-ஸோ கவுன்சில், பாதுகாப்புப் படையினரும் முழு ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.