
சென்னை: திருவள்ளூரில் 7 ஆண்டுகளாக வழிப்பறி கொள்ளையரை கண்டுபிடிக்க முடியாததால் 17.5 பவுன் நகைகளை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, இதுபோன்ற வழக்குகளில் இழப்பீட்டுத்தொகையை அதிகரித்து வழங்குவது தொடர்பாக தமிழக அரசும் அரசாணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (68) கடந்த 2018-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி தனது கணவர் பழனியுடன் மருத்துவ பரிசோதனைக்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களை அழைத்த ஒரு கும்பல், இப்பகுதியில் வழிப்பறி திருடர்கள் இருப்பதால் அணிந்துள்ள தாலிச்செயின், வளையல், மோதிரம் உள்ளி்ட்ட நகைகளை பத்திரமாக கழட்டி பேக்கில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியுள்ளனர். அவர்களை மாறுவேடத்தில் இருக்கும் போலீஸார் என நினைத்த கிருஷ்ணவேணி தனது 17.5 பவுன் நகைகளை கழட்டி பேக்கில் வைத்த மறுநிமிடம் மற்றொரு கும்பல் அந்த நகைகளை கொள்ளையடித்து தப்பியது.