
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகித முறை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என நம்பப்படுகிறது.
வரலாறு காணாத வரிக் குறைப்பு – நயினார் நாகேந்திரன்
இந்த வரி மாற்றத்தை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“வரலாறு காணாத வரிக் குறைப்பு! நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சுதந்திர தின உரையில் கூறியதுபோலவே, தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஓர் இன்பச் செய்தியாக ஜிஎஸ்டி வரியைக் குறைத்து நாட்டு மக்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், பெண்கள், சிறு-குறு வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் உள்ள இந்த வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பை அமல்படுத்திய நமது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
`தீபாவளி பரிசு’ – எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன் தன் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் தனது சுதந்திர தின உரையின் போது கூறியது போல், 56-வது ஜிஎஸ்டி கூட்டமானது நாட்டு மக்கள் அனைவருக்குமான சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
இதன்படி, முன்பிருந்த நான்கு விதமான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% வரி அடிப்படையில் இரண்டு அடுக்குகளாக மட்டுமே இனி செயல்பாட்டிலிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பால் மற்றும் ரொட்டி போன்றவற்றிற்கும், தனிமனித மருத்துவக் காப்பீடு மற்றும் உயிர் காப்பீடு போன்றவற்றிற்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரிய அறிவிப்பாக அமைந்துள்ளது.
மேலும், நடுத்தர வர்க்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயப் பொருட்கள் மீதான வரியும் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி சார்ந்த மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்து வகையிலும் நாட்டு மக்களின் நலனறிந்து, ஜிஎஸ்டி வரி முறையை சீர்செய்துள்ளது நமது மத்திய அரசு.
ஜிஎஸ்டி வரி மீதான அடுத்த தலைமுறை சீர்திருத்த நடவடிக்கை மேற்கொண்டு, மிகச் சிறப்பானதொரு தீபாவளி பரிசினை அறிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.