
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.
சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர். செல்வி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான செல்வ மதன் என்பவருடன் செல்விக்குப் பழக்கம் ஏற்பட்டது.
செல்வமதனுக்கு சோபி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே சமயம் கருத்து வேறுபாடு காரணமாக செல்வ மதன் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனைத் தொடர்ந்து செல்வ மதனுக்கும், செல்விக்கும் இடையேயான நட்பு நெருக்கமாக மாறியது. இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் இவர்களுக்கு வருண் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது.
செல்வ மதன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 2-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய செல்வி பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசில் செல்வ மதன் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வியைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் செல்வ மதன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்குச் சென்ற போலீஸார் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது ஐந்து வயதான சிறுவன் அபிநவ் தலையில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் சடலமாகக் கடந்துள்ளான். அருகில் ஒன்றரை வயதான குழந்தை வருண் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் குழந்தை வருணை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். சிறுவன் அபினவ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீஸ் நடத்திய விசாரணையில், செல்வ மதனின் உறவினர் ஒருவர் இரண்டு குழந்தைகளையும் பராமரித்து வந்துள்ளனர். அதே சமயம் செல்வி பிரிந்து சென்றதால் அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் செல்வ மதன் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுபோதையில் அடித்துத் தள்ளிவிட்டதில் அபிநவ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் செல்வ மதன் அடித்ததில் குழந்தை வருண் மயங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள செல்வ மதனை போலீஸார் தேடி வருகின்றனர்.