
புதுடெல்லி: டெல்லி – என்சிஆரின் பல பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ததை அடுத்து, யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பாய்ந்தோடுகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி – என்சிஆரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி வெள்ளம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி, 207 மீட்டரை எட்டியது. இதனால், கரையோர பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். கரையோர பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், கடைகள், சந்தை பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக, 25 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.