
தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் கடந்த ஆட்சியில் காலேஷ்வரம் அணை கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதில் சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி தீர்மானித்திருக்கிறார்.
இவ்வாறிருக்க, கடந்த திங்களன்று ஊடகங்கள் முன்னிலையில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் (KCR) மகளும், சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா, “காலேஷ்வரம் அணை கட்டும்போது, கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் மாநில நீர்வளத் துறை அமைச்சராக இருந்தார்.
தற்போதைய விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சந்தோஷும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.
இவர்களால்தான் என்னுடைய தந்தைக்கு அவப்பெயர் ஏற்பட்டு, தற்போது சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது.
இப்போதெல்லாம் என் தந்தையைச் சுற்றிலும் என்னைக் குறை கூறும் கும்பல் மட்டுமே உள்ளது” என்று வெளிப்படையாகப் பேசினார்.
இதன் காரணமாக, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கட்சியிலிருந்து கவிதா நேற்று (செப்டம்பர் 2) இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் சமூக மற்றும் கலாசாரக் குழுவான தெலுங்கானா ஜக்ருதி அமைப்பின் (கவிதாவால் தொடங்கப்பட்டது) அலுவலகத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, “கட்சியிலிருந்து திடீரென நான் இடைநீக்கம் செய்யப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது.
சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன்.
எனது இந்த ராஜினாமாவை சபாநாயகர் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு அனுப்புகிறேன்.

அதேசமயம், எந்தக் கட்சியுடனும் நான் செல்லவில்லை. தெலுங்கானா ஜக்ருதி உறுப்பினர்களுடன் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன்.
எனது தந்தையும், எனது சகோதரரும்தான் (கே.டி. ராமாராவ்) என் குடும்பம். நாங்கள் ரத்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள்.
கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலோ அல்லது பதவிகளை இழந்தாலோ இந்தப் பிணைப்பு முறிந்துவிடக்கூடாது.
சிலர் தங்கள் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் சிதைந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். என் தந்தையைச் சுற்றியிருப்பவர்களை ஆராயுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஹரீஷ் ராவும், ரேவந்த் ரெட்டியும் விமானத்தில் ஒன்றாகப் பயணம் செய்யும் போது எங்கள் குடும்பத்தை அழிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ரேவந்த் ரெட்டி இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
அவர் எனது குடும்ப உறுப்பினர்கள் கே.சி.ஆர் மற்றும் கே.டி.ஆர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்தார். ஹரிஷ் ராவ் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

ஆனால், காலேஸ்வரம் திட்டம் தொடங்கியபோது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஹரிஷ் ராவ்.
ஹரிஷ் ராவ் மற்றும் அவரது உறவினர் சந்தோஷ் ராவ் எங்கள் குடும்பத்தையும் கட்சியையும் அழிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்” என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய கவிதா, “நீண்ட நாள்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்துக்குச் சென்று, இந்தச் சதித்திட்டங்கள் குறித்தும் எனக்கெதிரான எதிரான பொய் பிரசாரம் பற்றியும் கே.டி.ஆரிடம் புகார் அளித்தேன்.
இது குறித்து நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா அண்ணா? இது தொடர்பாக ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?” என்று கேள்வியும் எழுப்பினார்.