
தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். ராஜா, கடந்த சில நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். அதனை ஒரு வீடியோவாக பதிவிட்டு சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவில், ‘‘யாரா வேணாலும் இரு, நம்ம லைனில் கரெக்டா இரு, திரையரங்கம் சிதறட்டும், இவன் பெயர் முழுக்க களைக்கட்டும்.
சிறுசுங்க எல்லாம் கதறட்டும், விசில் பறக்கட்டும், நரகத்துக்கே தெரியட்டும், அந்த எமனுக்குமே புரியட்டும், உலகத்துக்கே கேட்கட்டும்’’ என்ற திரைப்பட பாடலின் பின்னணியில் அந்த வீடியோ அமைந்து இருந்தது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் இந்த வீடியோவை அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக ராஜா உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர். மேலும் வீடியோ வெளியிட்டது தொடர்பாக, ராஜா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரையும் முத்தையாபுரம் காவல் நிலையத்தின் முன்பு நிற்க வைத்து போலீஸார் நூதன தண்டனை விதித்தனர்.

”ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்ற திருக்குறளை ராஜா உள்பட 3 பேரையும் நன்றாக வாசிக்க சொல்லியும், அதன் பொருளை விளக்கி கூறச் சொல்லியும், போலீஸார் வீடியோ பதிவு செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நூதன தண்டனைக்கு பிறகு ராஜாவை தவிர மற்ற 2 பேரையும் போலீஸார் விடுவித்தனர்.