
சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் அமலுக்கு வந்த சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருக்கிறார்.