
புதுச்சேரி: ஒருபுறம் ராகுல் மன்னிப்பு கேட்க கோரி புதுவை காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பாஜகவினர். மறுபுறம், மோடி பதவி விலகக் கோரி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனால் நகரெங்கும் கடும் நெரிசல் ஏற்பட்டது.
பிஹாரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட மேடையில் பிரதமரையும், அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் புதுச்சேரி பாஜகவினர் சுதேசி மில் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இதில், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமைச்சர் ஜான்குமார், எம்எல்ஏக்கள் சாய் சரவணன் குமார், கல்யாண சுந்தரம், தீப்பாய்ந்தான் உட்பட பலரும் பங்கேற்றனர்.