
புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான கூட்டாண்மை உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
பரஸ்பர வரிவிதிப்பு கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாகக் கூறி இந்தியப் பொருட்களுக்கு எதிராக கூடுதலாக 25% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25% கூடுதல் வரியை விதித்தார். இதன்மூலம், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் மொத்தம் 50 சதவீத கூடுதல் வரியை இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அடுத்து, இந்தியப் பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறி இருந்தார்.