• September 1, 2025
  • NewsEditor
  • 0

கடந்த வெள்ளிக்கிழமை தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் 2025-26 நிதியாண்டில், முதல் காலாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.8 சதவிகிதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வாகும்.

2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.4 சதவிகிதம் ஆகும். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் உற்பத்தி திறன் 6.7 சதவிகிதம் ஆகும்.

எப்படி பார்த்தாலும், இந்தக் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் உயர்ந்தது தான். இந்த வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியமும் படுத்தியுள்ளது.

பொருளாதார நிபுணர் நாகப்பன்

இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் குறித்து நமக்கு தெளிவாக விளக்குகிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

“அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி குறித்து நமக்கு முன்னரே தெரிந்துவிட்டது. அமலுக்கு வந்தது தான் இப்போது.

பல உற்பத்தியாளர்கள் வரி அமலுக்கு வருவதற்கு முன்பே, வேக வேகமாக உற்பத்தி செய்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகளைச் செய்துவிட்டனர். இதற்கு ‘ஃபிரண்ட் என்டிங் (Front Ending)’ என்று பெயர்.

எப்போது இந்த வரி பிரச்னைச் சரியாகும்… அதுவரை என்ன செய்வது என்று உற்பத்தியாளர்களுக்குத் தெரியவில்லை. அதனால் தான், அவர்கள் இந்த முன்னேற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.

ஜூன் மாதத்தை விட…

இந்தக் கூற்றை இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு (India’s Index of Industrial Production (IIP)) உண்மை என்று காட்டுகிறது.

கடந்த ஜூலை மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீடு 3.5 சதவிகிதம் ஆகும். ஆனால், கடந்த ஜூன் மாதம் 1.5 சதவிகிதமாக இருந்தது.

ஆக, ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளது.

அதாவது, தொழில்துறை உற்பத்தி உயர்ந்ததால், தானாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி திறனும் அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சி

சேவைத் துறை கொடுத்த உயர்வு

இன்னொரு பக்கம், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சேவைத் துறை வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் 7.8 சதவிகித வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறையில் 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.7 சதவிகித வளர்ச்சி இருந்துள்ளது.

இரண்டாம் நிலை துறைகளான உற்பத்தி துறையில் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.7 சதவிகிதம் வளர்ச்சி இருந்திருக்கிறது…. கட்டுமானத்தில் 7.6 சதவிகிதம் வளர்ச்சி இருந்துள்ளது.

சேவைத் துறையின் வளர்ச்சி கடந்த காலாண்டில் 9.3 சதவிகிதமாக இருந்துள்ளது.

பெரும்பாலும், கடந்த காலாண்டில் அனைத்து துறைகளுமே நல்ல வளர்ச்சியில் தான் இருந்துள்ளது. சேவைத் துறையின் வளர்ச்சி அபரிவிதமாகவே இருந்துள்ளது.

ட்ரம்பின் வரி சேவைத் துறையைப் பாதிக்காததால், அதன் வளர்ச்சி நன்றாக இருந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஜி.டி.பி
ஜி.டி.பி

அடுத்தடுத்த காலாண்டுகள் என்ன ஆகும்?

2025-26 நிதியாண்டின், முதல் காலாண்டின் நல்ல வளர்ச்சியை, அடுத்த காலாண்டில் எதிர்பார்க்க முடியாது. காரணம், அடுத்த காலாண்டின் போது, ட்ரம்பின் வரி அமலுக்கு வந்து, அதன் விளைவுகளும் பொருளாதாரத்தில் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கும்.

இந்த ஜூலை மாதத்தில் கூட, ஏற்றுமதிகள் நடந்துகொண்டு இருந்தன. அதனால், ஓரளவு பாசிட்டிவை எதிர்பார்க்கலாம். அந்தப் பாசிட்டிவும் வரப்போகிற மூன்றாம் காலாண்டை ஒப்பிடும்போது தான்.

மூன்றாவது காலாண்டில், மொத்தமாக அமெரிக்காவிற்கு செல்லும் ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டிருக்கலாம். அப்போது அந்தக் காலாண்டின் வளர்ச்சியை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்.

என்னென்ன நடக்கும்?

ஏற்றுமதிகள் குறைகிறப்போதே, வேலைவாய்ப்பு குறையும். வேலைவாய்ப்பு குறையும்போது, மக்களிடம் பணப்புழக்கம் குறையும். மக்களின் வாங்கும் திறன் குறையும். இதன் விளைவாக, வங்கிகளுக்கு வாராக் கடன்கள் அதிகரிக்கலாம்.

அடுத்த ஆறு மாதங்களில், இவை எல்லாம் நடக்கும். இவைகளின் விளைவு இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டின் முடிவில் தெரிய வரும்.

காரணம், இந்த ஜனவரி மாதம் வரைக்குமே மக்கள் எப்படியாவது இழுத்து பிடித்து ஓட்டிவிடுவார்கள். அதன் பின் தான், என்ன பாதிப்புகள் என்பது நன்கு தெரியவரும்.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி குறைப்பு

இந்தப் பிரச்னைகளைக் குறைக்கத் தான், இப்போது மத்திய அரசு ஜி.எஸ்.டியைக் குறைப்பதற்கான முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், மக்களின் வாங்கும் திறனை ஓரளவு தக்க வைக்கலாம்… பணவீக்கத்தைக் குறைக்கலாம். அதனால், மத்திய அரசின் இந்த நகர்வு புத்திசாலித்தனமானது தான்.

இன்னொரு பக்கம், இப்போதாவது குறைத்திருக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்.

உற்பத்தியாளர்கள் போட்ட கணக்கு

இந்திய பொருளாதாரத்தில் இத்தனை பிரச்னைகள் வெடிக்காமல் இருப்பதற்கு, ட்ரம்ப் வரியைக் குறைத்தாலே போதுமானது.

அவர் கூடுதல் 25 சதவிகித வரியைத் தவிர்த்துவிட்டு… முன் போட்டிருந்த 25 சதவிகித வரியை 20 சதவிகிதமாக குறைத்தாலே, உற்பத்தியாளர்கள் பெருமூச்சுவிட்டு கொள்வார்கள்.

20 சதவிகிதம் என்று வரும்போது, உற்பத்தியாளர்கள் கொஞ்ச நாளுக்கு குறைந்த லாபத்தில் சமாளிக்க தங்களைத் தேற்றிக்கொள்வார்கள்.

இன்னொன்று, இப்போது இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு கூடிக்கொண்டிருக்கிறது. இதனால், டாலர் மதிப்பு கூடும்போது, அதில் அவர்களுக்கு கொஞ்சம் லாபம் கிடைக்கும்.

அடுத்து, அரசாங்கம் வரி சலுகை கொடுத்தால், உற்பத்தியாளர்கள் ஓரளவு நிலைமை சமாளித்து கொள்ளலாம்.

இந்தக் கணக்குகளைப் போட்டு, உற்பத்தியாளர்கள், முதல் 25 சதவிகித வரிக்கு தயாராகி கொண்டிருக்கும்போது தான், ட்ரம்ப் கூடுதல் 25 சதவிகித வரியைப் போட்டு திக்குமுக்காட செய்துவிட்டார்.

ஒட்டுமொத்த வளர்ச்சி என்ன ஆகும்?

உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கிகள் கூறும்போது, ஒட்டுமொத்த வளர்ச்சி குறைவாகத் தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

கடந்த 6-ம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா கூறும்போது, 2025-26-ம் ஆண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இப்போதிருக்கும் சூழலில், இந்த வளர்ச்சியே மிகப்பெரிய வளர்ச்சி என்று எடுத்துகொள்ள வேண்டும்” என்றார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *