
கோவை பூ மார்கெட் தெப்பக்குளம் மைதானத்தில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “திமுக ஆட்சி 4 ஆண்டுகளை முடிந்துள்ளது. மிக மோசமான ஆட்சியை நடத்தியுள்ளனர். திமுக குடும்பம் ஒரு மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனால் துர்கா ஸ்டாலின் தினசரி ஒரு கோயில் சென்று புகைப்படம் எடுத்துப் பதிவு செய்கிறார். அவர்கள் குடும்பம் இந்து மக்களுக்கு எதிரானதல்ல என்பதற்காகப் பதிவு செய்கிறார்கள். 2026 தேர்தலுக்கு முன்பாக திமுக பல கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவார்கள். மக்கள் அதை நம்பக் கூடாது.
தமிழ்நாட்டில் டிஜிபியாக ஒருவர் பொறுப்பேற்றிருக்கிறார். டிஜிபியாக பொறுப்பேற்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றதைப் பார்த்திருக்கிறோமா. இதுபோன்ற அவலத்தை திமுக அரங்கேற்றியுள்ளது.
சங்கர் ஜிவாலுக்குப் பிறகு 6 பேர் டிஜிபியாகப் பொறுப்பேற்க காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். 6 பேரில் முதல் 3 பேரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.

அந்த 6 பேரில் யாருமே நமக்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதால் அப்படியே விட்டிருக்கிறார்கள். சீனியாரிட்டியில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவருக்கு டிஜிபி பதவி கொடுக்க முடியாது. அதனால் முதல்வர் பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ளனர். காவல்துறை எப்படி விளங்கும். கையைக் கட்டிப் போட்டு ஓடு என்றால் காவல்துறை எப்படி ஓடும்.
இப்படிப்பட்ட ஒரு அரசு இருக்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும். தமிழகத்தில் இன்று 62% குழந்தைகள் தனியார்ப் பள்ளியில் படிக்கிறார்கள். 37% குழந்தைகள் அரசுப் பள்ளிகள் படிக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபோது 43% குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்தார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 7% குறைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் எங்குச் செல்கிறாரோ அங்கெல்லாம் அவரின் அருகில் செல்வது தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் வேலை. பள்ளிக் கல்வித் துறை மிகப்பெரிய பொறுப்பு. ஐயன் கக்கன் இருந்த இடம். தற்போது பெட்டர் மாஸ் லைட் எடுத்துக் கொண்டு செல்பவர் எல்லாம் கல்வித்துறை அமைச்சர் ஆக இருக்கிறார்” என்றார்.