
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இயக்குநர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என சினிமாவில் அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்தவர், வீணை எஸ்.பாலசந்தர். ஹாலிவுட் பட பாணியில் அவர் இயக்கி நடித்த ‘அந்த நாள்’ இன்று வரை சிறந்த மிஸ்டரி த்ரில்லர் படத்துக்கான வரிசையில், தனியிடம் பிடித்திருக்கிறது. அமெரிக்கப் படமான ‘எ பிளேஸ் இன் த சன்’ பாதிப்பில் அவர் உருவாக்கிய படம், ‘அவனா இவன்?’
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் நடந்த பரபரப்பான கொலை வழக்குகளில் ஒன்று, ஜில்லெட் (Gillette) வழக்கு. நியூயார்க் நகரில் உள்ள ஆடை தொழிற்சாலை உரிமையாளரின் உறவினர், அங்கு வேலை செய்யும் இளம் பெண் மீது ஆசை கொள்கிறான். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை பயன்படுத்துகிறான். தாய்மை அடைகிறார், அந்தப் பெண். அவன் பணக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான். இதனால் அந்த இளம் பெண்ணை ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று படகு சவாரி செல்கிறான். நடு ஆற்றில் அவளை அடித்துக் கொன்று தண்ணீருக்குள் தள்ளிவிட்டு நீந்தித் தப்பிக்கிறான். அவள் இறப்பை ஒரு விபத்து போல செய்ய நினைக்கிறான். போலீஸார் அப்பெண்ணின் உடலைக் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குற்றவாளியைக் கண்டுபிடித்து தூக்குத்தண்டனை வழங்குகிறார்கள்.