
‘UPSC/TNPSC குரூப் – 1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
‘UPSC/TNPSC குரூப் – 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது.
அதனுடன், ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில்
-
முனைவர் வெ. திருப்புகழ் IAS (Retd.), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முன்னாள் ஆலோசகர்
-
டாக்டர் K. விஜயகார்த்திகேயன் IAS
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.
இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஊக்க உரை ஆற்றுகிறார்.
ஆனந்த விகடன், King Makers IAS அகாடமியுடன் இணைந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாம்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் டாக்டர் K.விஜயகார்த்திகேயன் IAS-யிடம் தொடர்புகொண்டு பேசினோம்.
அவர் கூறியதாவது:
“போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதலில் ‘நம்மால் முடியுமா?’ என்று நினைக்கக்கூடாது.
நிச்சயமாக நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்க வேண்டும்.
பள்ளி, கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுக்காத நாம் எப்படி இந்தப் போட்டித் தேர்வில் ஜெயிக்க முடியும் என்ற சந்தேகத்துடன் இந்தத் தேர்வுக்கு தயாராகக்கூடாது.

‘நம்மால் முடியும்’ என்ற தன்னம்பிக்கையுடன்தான் இந்தப் போட்டித் தேர்வுக்கு முதலில் வர வேண்டும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற எவ்வளவு நாள்கள் ஆகும் என்று தெரியாது. அதனால் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதற்காக மட்டுமே நம்முடைய வாழ்க்கையின் பல விஷயங்களை இழந்துவிடக்கூடாது.
எல்லாவற்றையும் சரியாக பேலன்ஸ் செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு 18 மணி நேரம், 20 மணி நேரம் படிப்பது முக்கியமல்ல.
குறைந்தது 6 மணி நேரம் படித்தாலும் அதைத் தொடர்ச்சியாக தினமும் படிக்க வேண்டும்.
அப்படி படித்தால் அதற்கான ரிசல்ட் நன்றாக இருக்கும்.” என்று அவர் அறிவுறுத்தினார்.