
திருச்சி: பஞ்சப்பூரில் அமைச்சர் கே.என். நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதால்தான், அங்கு பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியிருந்த நிலையில்,‘எனக்கு அங்கு 300 ஏக்கர் நிலம் இருந்தால், அதை பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்’ என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி மேலப்புதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: துறையூரில் ஆக.24-ம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தது, நோயாளியை காப்பாற்றுவதற்காகவே தவிர, வேறு எந்த நோக்கத்துக்காகவும் அல்ல. துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதற்கு அதிமுகவினரே காரணம். அவர்களே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்து தாக்கியதாக காவல் துறை தரப்பில் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.