
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக, இந்து முன்னணி உள்பட 65-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்புவாசிகள், இளைஞர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட போலீஸாரிடம் அனுமதி கோரியிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 35,000 சிலைகளை வைத்து வழிபட போலீஸார் அனுமதி வழங்கினர். சென்னையைப் பொறுத்தவரை 1,500 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.