
சென்னை: தமிழகத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.
நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முன்னிலை வகித்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவை வழங்கி, இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இரு மாநில முதல்வர்களும் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.