
புதுடெல்லி: மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) முதல் முறையாக பெண் கமாண்டோ குழுவினரை முக்கிய பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு விமான நிலையங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகம் மிகுந்த பகுதிகளில் பெண் கமாண்டோ குழுவினர் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது.
இதற்காக 100 பெண் சிஐஎஸ்எப் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆயுதப் பயிற்சி, தீயணைப்பு பயிற்சி, ஓட்டம், காடுகளில் உயிர் வாழும் பயிற்சி, நெருக்கடியான தருணங்களில் சாமர்த்தியமாக முடிவெடுப்பது, குழுப் பணியை சோதிக்க வடிவமைக்கப்பட்ட 48 மணிநேர நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சி போன்ற செயல்பாட்டு திறன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.