
புதுடெல்லி: தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதி்த்துள்ள உச்ச நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், விளாங்குடியில் அதிமுக சார்பில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இந்த கொடிக் கம்பங்களை, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.