
மேற்கு வங்கத்திலிருந்து வந்த இந்தியாவின் சிறந்த உள்ளூர் போட்டி வீரர்களில் ஒருவர் மனோஜ் திவாரி.
உள்ளூர் போட்டிகளைப் பொறுத்தமட்டில் முதல் தர கிரிக்கெட்டில் 47.8 ஆவரேஜில் 10,000-க்கும் மேற்பட்ட ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 42 ஆவரேஜில் 5,000-க்கும் மேற்பட்ட ரன்களும் அடித்திருக்கிறார்.
2008-லேயே ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியின் மூலம் தோனியின் தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிவிட்டார்.
ஆனால், தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காததாலும், கிடைத்த ஒரு சில வாய்ப்புகளில் கணிசமாக சோபிக்காததாலும் வெறும் 15 போட்டிகளிலேயே அவரின் சர்வதேச கரியர் முடிவுக்கு வந்துவிட்டது.
12 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 287 ரன்களும், 3 டி20 போட்டிகளில் 15 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.
ஐ.பி.எல்லில் 2012 சீசன் இறுதி போட்டியில் சி.எஸ்.கே-வுக்கெதிராக கே.கே.ஆர் அணியில் வின்னிங் ஷாட் அடித்த மனோஜ் திவாரிக்கு ஐ.பி.எல் கரியரும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

2023-24 ரஞ்சி சீசனோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இவர் தற்போது, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். மம்தா பானர்ஜி அமைச்சரவையில் சில மாதங்கள் அமைச்சராகவும் இருந்தார்.
இந்த நிலையில், தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான நேர்காணல் ஒன்றில், இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காததற்கு தன்னை தோனிக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
CricTracker ஊடகத்துடனான நேர்காணலில், “தோல்விகள் இருந்தாலும் வீரர்களைத் தக்கவைப்பதில் பெயர் பெற்றவர் தோனி. அவரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மனோஜ் திவாரி, “நான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு என்ன நடந்தது என்பதை எனது அனுபவத்தில் இருந்து மட்டுமே என்னால் பகிர்ந்து கொள்ள முடியும்.
அவர் உண்மையிலேயே தனது வீரர்களை ஆதரித்திருந்தால், அந்தக் குறிப்பிட்ட போட்டியிலும், குறிப்பிட்ட காலத்திலும் நான் சிறப்பாக செயல்பட்டதற்காக அவர் நிச்சயமாக என்னைத் தக்கவைத்திருப்பார்.

நான் மீண்டும் பிளெயிங் லெவனில் இடம்பிடித்தபோது, இலங்கைக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளும், 21 ரன்களும் எடுத்தேன். அடுத்த ஆட்டத்தில் 65 ரன்கள் எடுத்தேன்.
அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் எதிர்பார்த்த ஆதரவு எனக்குக் கிடைக்கவில்லை.
அவர் ஏன் என்னைத் தக்கவைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.
ஏனெனில், பிளெயிங் லெவன் அல்லது அணியில் இடம்பெறுவதற்கு செயல்திறன்தான் இறுதி அளவுகோல் என்று நான் எப்போதும் உணர்ந்தேன்.
ஆனால், என் விஷயத்தில் அது நடக்கவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னால் சொல்ல முடியாது.
எல்லோருக்கும் தோனியைப் பிடிக்கும். நீண்ட காலமாக தனது தலைமைத்துவத்தால் தன்னை நிரூபித்திருக்கிறார்.
அவரின் தலைமைப் பண்பு மிகச் சிறந்தது என்று எப்போதும் நான் கூறுவேன்.

எது எப்படியிருந்தாலும் என்னுடைய விஷயத்தில் எனக்குத் தெரியவில்லை. உங்களுடைய கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய ஒரே நபர் அவர்தான்.
அந்த சமயத்தில் அவர் விரும்பிய மற்றும் முழு ஆதரவு சிலர் இருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்.
நிறைய பேருக்குத் தெரியும், ஆனால் எல்லோரும் முன்வந்து அதைப் பற்றிப் பேசுவதில்லை.
கிரிக்கெட்டில் எல்லா இடத்திலும் விருப்பு வெறுப்புகள் உள்ளன. ஒருவேளை அவருக்கு என்னைப் பிடிக்காது.
ஒருவேளை அப்படி இருக்கலாம். அதுதான் நான் உங்களுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரே விஷயம்” என்று கூறினார்.