
ஈரான் அணுசக்தி விவகாரம்
2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை குறைத்தது. அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டது.
ஆனால் 2018-ல், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகியது. அதனால், ஈரான் மீது மீண்டும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில்தான் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது.
இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
அயதுல்லா அலி கமேனிதற்போதைய நிலை:
ஈரான், தனது அணுசக்தி திட்டம் சிவில் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என உறுதியாகத் தெரிவித்து வருகிறது. ஆனால், IAEA (அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு) தற்போது ஈரானில் கண்காணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், `ஆகஸ்ட் 31-க்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், “Snapback” என்ற நடைமுறை மூலம் ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வரும்” என ஈரானை எச்சரித்திருக்கும் ஐ.நா, ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஐ.நா-வுடன் பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக்கொண்டுள்ளார்.
செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் Snapback தடைகள் சட்டபூர்வமல்ல எனக் கூறும் ரஷ்யாவும், சீனாவும் ஈரானுக்கு ஆதரவாக நிற்கின்றன.
கமேனியின் கருத்து
இந்த நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “ஈரான் அமெரிக்காவிற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஈரானிய மக்கள் இத்தகைய அவமானத்தை கடுமையாக எதிர்ப்பார்கள்.
இது போன்ற தவறான எதிர்பார்ப்புகளைக் கொண்டவர்களுக்கு எதிராக ஈரானிய நாடு அனைத்து சக்தியுடனும் ஒற்றுமையாக நிற்க வேண்டும். அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்களை வெளியிட வேண்டாம்.
அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறுபவர்கள் வெளித் தோற்றத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இந்த பிரச்னை தீர்க்க முடியாதது.
அமெரிக்காவின் முகவர்களும் இஸ்ரேலின் சியோனிச ஆட்சியும் நம்மிடம் பிரிவினையை விதைக்க முயல்கிறது. இதெல்லாம் நம் நாட்டை அடிபணியச் செய்வதற்கான அமெரிக்க முயற்சிகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.