
ராமேசுவரம்/ சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள், மீனவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக இந்த அனுமதியை திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கை அடிப்படையில் தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 1,403 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய், இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) அனுமதி பெற்றது. இதில் முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிச்சியம், பேய்குளம், வல்லக்குளம், அரியக்குடி, காவனூர், சிறுவயல், ஏ.மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை ரூ.675 கோடி செலவில் தோண்டதிட்டமிட்டது.