
சென்னை: இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, நாளை சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். குடியரசுத் துணைத் தலைவராகவும் மாநிலங்களவைத் தலைவராகவும் இருந்த ஜெகதீப் தன்கர் ஜூலை 21-ம் தேதி உடல்நிலையை காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை உடனே தேர்தல் ஆணையம் தொடங்கியது.
செப்.9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 எம்பிக்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. அதேபோல் மாநிலங்களவையில் 239 எம்பிக்கள் உள்ளனர். 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மகாராஷ்டிர மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.