
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தெப்பக்காடு பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது.
ஆசியாவின் பழைமை வாய்ந்த யானைகள் முகாம்களில் ஒன்றாக விளங்கி வரும் இந்த முகாமில் தாயை இழந்த நிலையில், மீட்கப்பட்ட யானைகள் மற்றும் எதிர்கொள்ளல்களை ஏற்படுத்திய யானைகளை பழங்குடி பாகன்களைக் கொண்டு கும்கிகளாகப் பராமரித்து வருகின்றனர்.
பராமரிப்பு காரணங்ளுக்காக தெப்பக்காடு மட்டுமின்றி பாம்பேக்ஸ், ஈட்டி மரம் அபயரண்யம் போன்ற பகுதிகளிலும் யானைகளை பராமரித்து வருகின்றனர்.
அபயரண்யத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சுமங்கலா என்ற பெண் யானைக்கும், உடைந்த கொம்பன் என்று அழைக்கப்படும் சங்கர் யானைக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு யானைகளுக்கு இடையே மோதல் முற்றியதில் சங்கர் யானையை முட்டித்தள்ளி கீழே வீழ்த்தி சுமங்கலா யானை தாக்கியிருக்கிறது.
யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்க முயன்ற சங்கர் யானையின் பாகன் விக்கி, சுமங்கலா யானையை விரட்ட முயன்றுள்ளார்.
ஆனால், ஆக்ரோஷமாக சங்கர் யானையை சுமங்கலா தாக்கிய நிலையில், அருகில் கிடந்த கத்தியை எடுத்து சுமங்கலா யானையின் பின்னங்காலில் வெட்டியிருக்கிறார் பாகன் விக்கி.

அங்கிருந்து அலறியடித்து ஓடியிருக்கிறது சுமங்கலா யானை. வெட்டுக் காயத்துடன் காலில் ரத்தம் வடிவதைக் கண்ட சுமங்கலா யானையின் பாகன் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.
பின்னணி குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தினர், “பாகன் கத்தியால் வெட்டியதில் பின்னங்காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் மூலம் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகன் விக்கி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.