
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்களுக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.