
புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் காரசாரமாக வாதிட்டார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்துக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். மேலும், சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாத காலத்திலும் ஒப்புதல் அளிக்க வேண்டு மென கால நிர்ணயம் செய்தும் உத்தரவிட்டனர்.