• August 20, 2025
  • NewsEditor
  • 0

ராஜஸ்தானின் ரந்தாம்போர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற வாகனம் பழுதடைந்ததால் புலிகள் வாழும் காட்டில் பயணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் ஒன்றரை மணி நேரம் சிக்கித் தவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்டிடிவியின் தகவலின்படி, சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் பூங்காவின் 6-ஆம் மண்டலத்தில் நடந்துள்ளது. அந்த பகுதி 60-க்கும் மேற்பட்ட புலிகள், சிறுத்தைகள், கரடி, முதலைகள் போன்ற ஆபத்தான விலங்குகளின் வாழ்விடமாகும்.

புலி

காட்டு பகுதியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் தெரிவித்ததாவது, ”வழிகாட்டி (Guide) முதலில் மற்றொரு வாகனத்தை கொண்டு வருவதாகச் சொல்லி சென்றார். ஆனால் திரும்பவே இல்லை. அவர் குழுவினருடன் தவறான முறையில் நடந்துகொண்டனர்” என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையில், சுற்றுலாப் பயணிகள் இருள் சூழ்ந்த நிலையில் குழந்தைகளுடன் கைபேசி விளக்கை பயன்படுத்தி அச்சத்துடன் நிற்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவர்கள் இரவு 7.30 மணியளவில் மீட்புக் குழுவால் காப்பாற்றப்பட்டனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் பலர் தங்களின் அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரந்தாம்போர் புலி காப்பகத்தின் புலித் திட்ட இயக்குநரும், தலைமை வனக் காவலருமான அனூப் கே.ஆர். கூறியதாவது “சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மை. விதிகளை மீறுகிற எந்த வழிகாட்டி அல்லது டிரைவருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய அலட்சியமான செயல்பாடுகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *