நடிகர் சூர்யாவின் ‘அகரம்’ அறக்கட்டளை தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்ததையொட்டி, சமீபத்தில் ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தியிருந்தார்.
‘அகரம்’ அறக்கட்டளை மூலமாகப் பயனடைந்த மாணவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகிழ்வுடன் பேசியிருந்தனர்.
அந்த நிகழ்வின் காணொளிகள் பலவும் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக வைரலானதைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா கூடிய விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்று தகவல்களைப் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
அந்தத் தகவல்களையெல்லாம் மறுத்து, நடிகர் சூர்யாவின் தலைமை நற்பணி இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று, சமூக வலைதளங்களை மையமாக வைத்து, இந்தப் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
இந்தச் செய்தி உண்மைக்கு மாறான, போலியான தகவல் என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கொள்கைகளுக்கு முரணானது.

கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளன.
சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு, தமிழ்நாடு மட்டுமின்றி உலகளாவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட்டதற்குக் காரணமானவர்களாகிய உங்களுக்கு, எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துகளோடு, சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.
எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான இந்தப் போலியான செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.