
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.
இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு இடையே நடந்த கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் கழிவறையை சுத்தப்படுத்த வைத்திருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் சுகன்யா . அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுகன்யா, கடந்த ஒன்றரை மாதமாக தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
குழந்தைகள் குமரகுரு, தாரணிஸ்ரீ இருவரும் காடாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை. அன்று மதியம் தன்னுடைய உறவினர்களுக்கு ராஜா, அவரது மகன் குமரகுரு, தாரணிஸ்ரீ ஆகிய 3 பேரும் வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசஜ் போட்டிருந்தனர்.
வாய்ஸ்மெசஜ்
அதில் பேசும் ராஜா, “நான் படித்த முட்டாள். தப்பான முடிவை எடுக்கிறேன். மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார். அதேபோல குழந்தைகள் குமரகுரு, தாரணிஸ்ரீ இருவரும், “நாங்கள் அப்பாவுடன் கடவுளை பார்க்க போகிறேன்” என வாய்ஸ்மெசஜ் போட்டிருந்தனர்.
அதைக் கேட்டு அதிர்ந்த உறவினர்கள் உடனடியாக பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது, அங்கு ராஜகுரு, குமரகுரு, தாரணிஶ்ரீ ஆகிய மூவரும் ஒரே துாக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

குடும்ப பிரச்னை காரணமா?
தகவலறிந்த பண்ருட்டி போலீஸார் 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக ராஜா, தனது குழந்தைகளுடன் இந்த விபரீத செயலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.