
ஐபிஎல்-லில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் அணி ஆர்.சி.பி. ஆனாலும், ஐ.பி.எல் முதல் சீசனிலிருந்து தொடர்ச்சியாக 17 சீசன்களாக மூன்று முறை இறுதிப் போட்டி வரை சென்றும் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.
இப்படியிருக்க, கடந்த சீசனில் ரஜத் பட்டிதார் தலைமையில், `நிச்சயம் கோப்பையை வெல்வோம்’ என்ற பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கியது பெங்களூரு அணி.
அதற்கேற்றாற்போல, அவர்களைப் போலவே 17 சீசன்களாக முதல் கோப்பைக்காகப் போராடிக்கொண்டிருந்த பஞ்சாப் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி, ஐ.பி.எல் கோப்பையை முதல்முறையாகக் கையிலேந்தியது.
இந்த நிலையில், மும்பை, சென்னை ஆகிய அணிகளின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, பெங்களூரு அணி இன்னும் நான்கு கோப்பைகளை வெல்ல 72 வருடம் ஆகும் என்று கிண்டலடித்திருக்கிறார்.
சுபாங்கர் மிஸ்ராவுடன் அன்ஃபில்டர்டு (Unfiltered) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அம்பத்தி ராயுடு, “ஆர்.சி.பி சாம்பியன் பட்டம் வென்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எங்கள் பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தனர்.
ஆர்.சி.பி ரசிகர்கள் நாடு முழுவதும் பரவியிருக்கின்றனர். ஆனால், இதேபோல 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆர்.சி.பி சாம்பியன் பட்டம் வெல்லுமானால், மொத்தமாக 5 கோப்பைகளை வெல்ல 72 ஆண்டுகள் ஆகும்.

அவர்கள் தங்களின் வேகத்தைக் கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். ஆர்.சி.பி சரியான பாதையில் செல்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் விளையாடும் விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன்” என்று கூறினார்.
18 வருட ஐ.பி.எல் வரலாற்றில் அதிகபட்சமாக மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.