சென்னை: ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றால், பிற அரசுத்துறை ஊழியர்களைப் போல ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்கப்படுவதில்லை.
அதன்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வரை பணப்பலன் வழங்கப்படவில்லை. இதனால் சிஐடியு சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியானது.





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































