
வேலூர்: தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட டிஜிபியால் அவர் ஓய்வுபெறும்வரை ஒழிக்க முடியவில்லை. கடைசி வரை ‘ஓ’ போட்டது தான் மிச்சம் என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
வேலூர் மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்கிறார்கள். இதை தடுக்க இந்த அரசால் முடியவில்லை. இதில், ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதால் காவல் துறையால் தடுக்க முடியவில்லை. காவல் துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்றதாக 2,348 இடங்கள் என முதல்வர் வெளியிட்ட கொள்கை விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்டது 148 பேர்தான். மற்றவர்கள் யாரும் கைது செய்யவில்லை. அந்த மற்றவர்கள் எல்லாம் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.