
மதுரை: உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, நாமக்கல் சிறுநீரக திருட்டு வழக்கின் விசாரணை மற்றும் மனித உடல் உறுப்புகள் விற்பனையை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், சாய ஆலை தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் திருடப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு சிறுநீரகத்துக்கு ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. இது 1994-ம் ஆண்டின் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்துக்கு எதிரானது.