
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று வீராஜ்பேட்டை, மடிகேரி ஆகிய இடங்களில் 148 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று மாலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கன‌ அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 124.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.